சொந்த நிலங்களை விட்டு அகதி முகாமில் வசிக்கும் நாங்கள் மழை காலங்களில் கோவில்களிலும், அரச கட்டிடங்களிலும் அகதிகளாக செல்வதும் மழை நின்ற உடன் மீண்டும் அகதி முகாமுக்குள் வருவதும் தொடர்கதையாக உள்ளது என இடம் பெயர்ந்துள்ள பலாலி கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து உறவினர்கள் வீடுகளிலும் அரச கட்டிடங்களிலும் தங்கியுள்ள பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பொலிகண்டி அகதி முகாம் மக்களை நேற்றைய தினம் வலி.வடக்கு வள நிலையத்தினர் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினரும் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களது குறைகளை கேட்டறிந்தனர். 1990ம் ஆண்டு யாழ் பலாலி பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் இப் பகுதியில் தற்காலிகமாக வசித்து வருகின்றனர். யுத்தம் நிறைவு பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் தமது சொந்த நிலங்களுக்குத் திரும்ப முடியவில்லை என கவலை வெளியிட்ட அவர்கள், எதுவும் இல்லாத அகதிகளாக மழை வெள்ளத்திலும் ஓலை குடிசைகளிலும் தாம் வாழ்ந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். மக்கள் சந்திப்பில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் குழுவினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.