முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியில் அமைந்துள்ள யோகபுரம் மகாவித்தியாலய வைரவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றுவருகிறது.
1962ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யோகபுரம் மகாவித்தியாலயம் 2022ஆம் ஆண்டு தனது வைரவிழா கண்டுள்ளது.
அந்தவகையில் பாடசாலையின் வைரவிழா நிகழ்வானது இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.
யோகபுரம் மகாவித்தியாலய முதல்வர் த.பிறேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றுவருகின்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவரும் முன்னாள் முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருமான ந.வேதநாயகனும், சிறப்பு விருந்தினர்களாக துணுக்காய் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் மாலதி முகுந்தன், வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் தர்மலிங்கம் முகுந்தனும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
நிகழ்வில் பாடசாலையின் வரலாற்றைத் தாங்கிய வைரநதி நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு, கலை நிகழ்ச்சிகள் பலவும்
இடம்பெற்றுவருகின்றன.
இன்று மாலை 6 மணி வரை இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், கல்வித் திணைக்கள அதிகாரிகள், அயல் பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.