‘இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் 4வது அமர்வு நேற்று பிற்பகல் யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல்துறை மற்றும் அரசறிவியல் துறை பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் முதலாவது அமர்வு கடந்த மாதம் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து நேற்று இடம்பெற்ற நான்காவது அமர்வில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக சந்திரிக்காவின் தீர்வுத் திட்டம் தொடர்பான ஆய்வை வருகை தரு விரிவுரையாளரும் பத்தி எழுத்தாளருமான ஐ.வீ.மகாசேனன், விரிவுரையாளர் செல்வி ஜஸ்மியா குகதாசன் ஆகியோர் நிகழ்த்தியதுடன் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர். தொடர்ந்து அரசறிவியல்துறை தலைவர் பேராசிரியர் கொ.ரீ.கணேசலிங்கம் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததுடன், தொகுப்புரையையும் வழங்கினார். இதில் அரசியல் ஆய்வாளரும் யாழ் பல்கலைக்கழக வருகை தரு விரிவுரையாளருமான சி.அ.யோதிலிங்கம், அரசறிவியல் துறை மாணவர்கள், அரசியல் ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.