முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய 29 வயதான மற்றுமொரு பணிப்பெண்ணையும், ரிஷாத் பதியுதீனின் மனைவியின் சகோதரர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரிஷாத்தின் இல்லத்தில் பணியாளாக இருந்து தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குழுவிடம், குறித்த 29 வயதான பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதன் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்திருக்கின்றது எனச் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார் என்று குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையடுத்து பொலிஸ் குழு ஒன்று ரிஷாத்தின் இல்லத்துக்கு மீண்டும் சென்று வாக்குமூலம் பதிவு செய்திருக்கின்றது.
ஏற்கனவே ரிஷாத்தின் வீட்டில் பணிப்பெண் ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் ரிஷாத் பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.