வங்கதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள், யாரும் தப்ப முடியாது என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.
வங்காளதேசத்தில் இந்து கோயில்களில் துர்கா பூஜை விழா நடந்து வருகிறது. அங்குள்ள கொமில்லா நகரில் இந்து கோயில்களில் கும்பல் ஒன்று திடீரென்று தாக்குதல் நடத்தியது.
துர்கா பூஜை விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் சேதப்படுத்தப்பட்டன. அங்கிருந்த பக்தர்களை தாக்கினர்.
சந்த்பூர், ஹாஜிகன்ஜ், பெகுலா உள்ளிட்ட நகரங்களிலும் கோயில்கள் தாக்குதல்கள் நடத்தன.
இதையடுத்து நான்கு நகரங்களில் வன்முறை ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் அனுப்பட்டுள்ளனர். வன்முறையில் 4 பேர் பலியாகினர். 22 பேர் காயம் அடைந்தனர்.
சமூக ஊடகங்களில் மத ரீதியாக தவறான தகவல் பரவியதே கலவரம் ஏற்பட காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
வன்முறையை ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கொமில்லாவில் நடந்த சம்பவங்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யாரும் தப்ப முடியாது. அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.
முழுமையான அளவிலான தகவல்கள் விரைவில் பெறுவோம்.
இது தொழில்நுட்பத்தின் சகாப்தம், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கண்டிப்பாக கண்காணிக்கப்பட்டு அடையாளம் காணப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.