கிழக்கிலங்கையின் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஏ.ஜெ.எல். வஸீல் தொகுத்து எழுதிய ‘மருதமுனை வரலாற்றில் மூத்த கல்வியியலாளர் ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.ஏ.எஸ் இஸ்மாயில் மௌலானா ஜே. பி அவர்களின் கல்வி, சமய, சமூக பங்களிப்பு’ குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வு மருதமுனையில் நடைபெற்றது.
மருதமுனை இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஏற்பாடு செய்த இந்த நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு யாழ்ப்பாணம், வட மாகாணத்துக்கான குடியல் மேல் முறையிட்டு மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாஜ் ரீ.எல்.ஏ. மனாப் தலைமை தாங்கினார்.
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அஷ்ரப் ஆராதனை மண்டபத்தில் ”மர்ஹூம் கலாநிதி .எஸ்.முகைதீன் பாவா அரங்கில் நடைபெபெற்ற இந்த நிகழ்வில் வரவேற்பு உரையை முன்னாள் நிருவாக உத்தியோகத்தர் கவிஞர் மருதமுனை ஹசன் நிகழ்த்த இவரது கல்விச் சேவை குறித்து ஓய்வு நிலை அதிபர் திலகம் ஏ.எல். மீராமுகைதீன் உரையாற்றினார். முன்னாள் மேல் நீதிமன்ற ஆணையாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ்.எம்.ஜெமீல், உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம். பிர்தௌஸ், விரிவுரையாளர் அஷ்செய்க் எப்.எம்.அன்ஸார் (நளீமி), அல்-மனார் தேசிய பாடசாலையின் தற்போதைய அதிபர் எம்.ஜெ.ஏ.ஹஸீப் ஆகியோர் இஸ்மாயில் மௌலானாவின் சேவைகள் மற்றும் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொண்டனர்.
நூல் பிரதிகள் இலவசமாக வழங்கப்பட்டதுடன் ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.ஏ.எஸ் இஸ்மாயில் மௌலானாவை பாராட்டி பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் பலரால் பொன்னாடை போர்த்தி பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் மூத்த கல்வியாளர்கள், துறை சார்ந்த அதிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.