ஹற்றன் நஷனல் வங்கி மல்லாவி கிளையினரால் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் தெரிவுசெய்யப்பட்ட 20 கற்பவதிகளுக்கு சத்துணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. ஹற்றன் நஷனல் வங்கி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் உங்களுக்காக நாம் போசாக்கு திட்டம் ஊடாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 பேருக்கு சத்துணவு வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் தெரிவுசெய்யப்பட்ட 20 கற்பவதிகளுக்கு சத்துணவு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மல்லாவி ஹற்றன் நஷனல் வங்கி முகாமையாளர் அ.அமிர்தசொரூபன் தலைமையில் இடம்பெற்றது. இத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட குறித்த 20 கற்பவதிகளுக்கும் தலா 5000 ரூபா பெறுமதியான சத்துணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு தொடர்ச்சியாக மூன்று தடவைகள் இந்த சத்துணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி ம.சாந்தமேனன், மல்லாவி குடும்பநல உத்தியோகத்தர் க.அமுதா, அனிஞ்சியன்குளம் கிராம அலுவலர் துஸ்யந்தினி, மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பத்திராஜ, ஹற்றன் நஷனல் வங்கி வட பிராந்திய முகாமையாளர் ம.தயாகரன், துணுக்காய் பிரதேச செயலக முன்பராய சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெ.சுதாநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சத்துணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.