61 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பெண் கைது!

0
13

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 61 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (21) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பெண் தனது 7 வயது மகளுடன் துபாயிலிருந்து இன்றைய தினம் காலை 08.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான பெண் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 35,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 175  சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபரான பெண் தெஹிவளை பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் கோரிக்கைக்கு இணங்க இந்த வெளிநாட்டு சிகரட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.