அமைச்சர் கம்மன்பிலவுக்கு ஆதரவளிக்க விமல் வீரவன்ச தரப்பினர் முடிவு

0
355

அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பலர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்சவை அவரது இல்லத்தில் நேற்று(13) மாலை சந்தித்துள்ளனர்.

எரிபொருள் விலை ஏற்றம் தொடர்பாக மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எரிபொருள் விலையேற்றம் தொடர்பிலான தீர்மானம் அமைச்சர் கம்மன்பிலவினது தீர்மானமல்ல என்றும் அது அரசாங்கத்தின் தீர்மானமென்றும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே அமைச்சர் கம்மன்பிலவுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கு கட்சியின் தலைவர்கள் இதன்போது தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியசவம் வெளியிட்ட எழுத்துமூல அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கையொன்றை வெளியிடுவதற்கும் கட்சியின் தலைவர்கள் இதன்போது தீர்மானித்துள்ளனர்.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொதி வழங்குவதுத் தொடர்பிலும் இதன்போது யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், டிரான் அலஸ், விசேட வைத்தியர் ஜீ வீரசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது கருத்துரைத்துள்ள, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அமைச்சர் கம்மன்பிலவுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.