அம்பாறை அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டம்

0
181

விவசாயிகளின் சமகாலப்பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கோரி அம்பாறை அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச விவசாய அமைப்புக்கள் இணைந்து இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
அக்கரைப்பற்று மணிக்கூட்டுக்கோபுரம் முன்பாக ஒன்றிணைந்து பல்வேறு சுலோக அட்டைகளை தாங்கி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திய விவசாயிகள் பேரணியாக அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியூடாக சின்னப்பள்ளி வரை சென்று அங்கிருந்து ஆலையடிவேம்பு பிரதேசசெயலகம் வரைசென்றனர்.
பிரதேசசெயலகம் முன்பாக தமது எதிர்ப்பினை வெளியிட்ட விவசாயிகள் அங்கு வருகைதந்த அம்பாறை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் த.கலையரனிடமும்
உதவிப் பிரதேச செயலாளர் ஆர்.சுபாகரிடமும் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களையும் கையளித்தனர்.
சிறுபோக அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் நெற்செய்கைக்கான உற்பத்திசெலவு அதிகரித்துள்ளதுடன் விளைச்சல் குறைவடைந்தமையினால் தாம் பெரும் நஷ்டத்திற்குள்ளாகியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் அரசினால் வழங்கப்பட்ட மானியப்பணமும் பணமாக வழங்கப்படாமல் வவுச்சர் மூலமாக வழங்கப்பட்டு கண்துடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்துகின்றனர்.
நெல்லின் உத்தரவாத கொள்வனவு விலையினை கிலோ ஒன்றிற்கு 100 ரூபாவும் காய்ந்த ஈரப்பதனற்ற நெல்லினை 120 ரூபாவரை அதிகரித்து விவசாயிகளின் முழு உற்பத்தியையும் அரசு நெற்சந்தைப்படுத்தும் அதிகார சபை மூலம் கொள்வனவு செய்யவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேநேரம் தனியாரும் உத்தரவாத விலைக்கே நெல்லை கொள்வனவு செய்யவேண்டும் எனவும் மானிய பணத்தை பணமாக வழங்கவும் அல்லது விவசாயிகள் விரும்பும் உரத்தை கொள்வனவு செய்ய அனுமதிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
எதிர்காலத்தில் பெரும்போக செய்கையில் விவசாயிகள் ஈடுபடுவதானால் உரம், களைநாசினி, பூச்சிநாசினி, போன்றவற்றின் விலையினை குறைத்துஉறுதிப்படுத்த வேண்டும் எனவும்
அரிசி இறக்குமதியை நிறுத்தி நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை காப்பாற்றுமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.