மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 02 சந்தேக நபர்களை கைக்குண்டுடன் காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளனர்
குறித்த சந்தேக நபர்களை கைது செய்யும் போது சந்தேக நபர்கள் கைக்குண்டு வைத்திருந்ததாகவும் அக் கைக்குண்டை மீட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காங்கேயனோடை 13ம் வட்டாரம் பிரதான வீதியிலுள்ள வீடொன்றில் ஓரிரு தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் ஆலோசனையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ். ரஹீம் தலைமையிலான பொலிஸ் சார்ஜன் ஜெயசிங்க , கருணாரட்ன, பொலிஸ் அதிகாரிகளான தனோஜன், இரந்த ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து காங்கேயனோடை வீட்டில் திருடப்பட்ட 50000 ரூபா பணம், கையடக்க தொலைபேசி, பாவனை பொருட்கள், கடிகாரம் ஆகியவற்றை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் மீட்கப்பட்ட கைக்குண்டு, திருடப்பட்ட பொருட்கள் என்பவற்றை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.