26 C
Colombo
Saturday, May 11, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் பீதியடையத் தேவையில்லை – சத்தியமூர்த்தி

கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் பீதியடையத் தேவையில்லை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கீழ் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கான விசேட சிகிச்சை நிலையம் கோப்பாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இங்கு நேற்று 18 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 18 பேரும் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்திலிருந்தபோது அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கோப்பாய் விசேட சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கோப்பாய் விசேட சிகிச்சை நிலையத்தில் எமது மருத்துவமனை மருத்துவர்கள், தாதியர்கள் அடங்கலாக அனைத்து உத்தியோகத்தர்களும் சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த விசேட மருத்துவ நிலையத்தில் 350 பேருக்கு சிகிச்சையளிக்கக் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல் நிலையாக சாதாரணமாகத் தொற்றுக்குள்ளானவர்கள் வேறு எந்தப் பிரச்னையும் இல்லாதவர்கள் இந்த மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு பின் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

இதேவேளை, கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் சில கட்டடங்கள் மாத்திரமே தங்கியிருக்கின்ற வசதியுள்ள கட்டடங்கள் மாத்திரமே மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஏனைய கட்டடங்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் போது அதனை இலகுபடுத்த இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இதுதவிர கோப்பாய் பிரதேசத்திலுள்ள மக்கள் எந்தவித பய பீதியடையத் தேவையில்லை. ஏனெனில் நோயாளர்கள் சரியான முறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்பட்டு தெல்லிப்பழையில் எரியூட்டப்படுகிறது.

எனவே அப்பகுதி மக்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. யாழ். போதனா மருத்துவமனை மருத்துவர்கள் பலர் மிக அவதானமான முறையில் சுய பாதுகாப்பு அங்கிகள் அணிந்து சேவையை வழங்கி வருகின்றனர். ஆகவே, பொதுமக்கள் இது தொடர்பில் பீதியடையத் தேவையில்லை. உங்களுக்கு ஏதாவது முறைப்பாடுகள் இருக்குமாயின் யாழ்.போதனா மருத்துவமனையுடன் தொடர்பு கொள்ள முடியும்.

யாழ். போதனா மருத்துவமனையில் ஒருநாளைக்கு 400 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளக் கூடிய வசதிகள் காணப்படுகின்றன. இங்கு இரண்டு இயந்திரங்களைப் பயன்படுத்தி 7 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

காலையில் 8 மணிக்குப் பரிசோதிக்கப்பட்டு இரவு 7 மணிக்கு பி.சி.ஆர். முடிவுகளை வெளியிடக் கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு மேலதிகமாக எதிர்வரும் வாரம் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன


யாழ்.மாவட்டத்தில் இதுவரை சமூகத்தொற்று ஏற்படவில்லை. எதிர்வரும் காலங்களில் நடைபெறுபவற்றை சரியாக எதிர்வு கூறமுடியாது. பொதுமக்கள் சரியான விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் சமூகத் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் எனத் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles