மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவின் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றை உடைத்து கருவிகளை திருடிய சந்தேக நபரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட கருவிகளையும் கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 15ம் திகதி மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றில் இருந்து கமரா, சிறிய மடிக்கணினி, துவிச்சக்கர வண்டி உட்பட அதனோடு தொடர்புடைய ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான கருவிகள் திருடப்பட்டுள்ளன.
இதையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் ஆலோசனையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரஹீம் தலைமையில் மேற் கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் திருடப்பட்ட கருவிகளையும் காத்தான்குடி பொலிஸார் மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் மீட்கப்பட்ட கருவிகளையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.