“இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுடன், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும். அந்தவகையில் பிரிட்டனில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்து செயற்பட விரும்புகின்றோம்.”
– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறும் பிரிட்டன் அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட் டிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டனின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
இலங்கையின் நெருங்கிய மற்றும் நடைமுறை நண்பராக ஒத்துழைக்க, ஐக்கிய இராச்சியம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் பிரிட்டன் அமைச்சர் கூறினார்.
ஐக்கிய இராச்சியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 2023இல் 75 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இதற்காக ஒரு விழாவை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில், இரு நாடுகளின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்தும் வகையிலான நிகழ்வுகளை நடத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன், முதன்மைச் செயலாளர் மேத்யூ டெய்த், லோர்ட் தாரிக் அஹமட்டின் உதவியாளர் இசபெல் ஸ்கொட், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.