மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மேம்பாட்டுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு சுவிட்சர்லாந்திடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையே நேற்று செவ்வாய்கிழமை (11) இடம்பெற்ற விசேட சந்திப்பில் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தைப் போன்றே இந்நாட்டிலும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி திட்டங்களுக்கு அந்நாட்டு அரசின் அதிகபட்ச உதவிகளை பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
புதைபடிவ எரிபொருட்களிலிருந்து புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கு மாறுவதற்கான சுவிட்சர்லாந்தின் 2023 சட்டத்தை பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வானிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இது ஒரு வரலாற்று திருப்பம் என்றும் தெரிவித்தார்.
கடந்த வார இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர், புதுப்பிக்கத்தக்க வலுசக்தியில் கவனம் செலுத்துமாறு தானும் தனது குழுவினரும் தொடர்ந்து அரசுக்கு பரிந்துரை செய்ததாக தெரிவித்தார். மின் நுகர்வு மற்றும் மின் உற்பத்தியிடையே ஏற்பட்ட சமநிலையின்மையே இந்த மின் தடைக்கு காரணம் என்றும் விளக்கமளித்தார்.
மின்கல ஆற்றல் சேமிப்புக் கட்டமைப்பு போன்றவற்றின் அவசரத் தேவைப்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது சுட்டிக்காட்டினார்.
எனவே, மின்வெட்டு இல்லாமல் மக்களுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்க குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இதற்குத் தேவையான ஒத்துழைப்புகளைப் பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுவிட்சர்லாந்து தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.