மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கனகரெத்தினம் கமலநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கோறளைப்பற்றுப் பிரதேச சபைக்கான தவிசாளரைத் தெரிவு செய்யும் கூட்டம், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன் தலைமையில்
சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இன்றைய அமர்வில் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 23 உறுப்பினர்கள் மண்டபத்தில் சமூகமளித்திருந்தனர்.
கூட்டத்திற்கு தேவையான நிறைவெண் இருப்பதனால் கூட்டத்தை தொடர்ந்து நடாத்துவதாக, உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்ததோடு தவிசாளருக்கான
முன்மொழிவுகளையும் கோரினார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் கா.நடராசாவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் க.கமலநேசனும் முன்மொழியப்பட்டனர்.
தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான பகிரங்க வாக்கெடுப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட க.கமலநேசன் 12 வாக்குகளையும்,
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் முன்மொழியப்பட்ட கா.நடராசா என்பருக்கு 8 வாக்குகளையும் பெற்றன.
4 மேலதிக வாக்குகளால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோறளைப்பற்று பிரதேச சபைக்கான ஆட்சியைக் கைப்பற்றியது.
கோறளைப்பற்று பிரதேச சபையானது கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆளுகைக்குள் இருந்தது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோல்வியடைந்ததினால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் தவிசாளராக இருந்த சோபா ஜெயரஞ்சித் என்பரது தவிசாளர் பதவியானது வறிதாக்கப்பட்டது.
இன்றைய கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் எஸ்.பிரகாஸ், கிழக்கு மாகாண ஆய்வு உத்தியோகஸ்த்தர் என்.ஜங்கரன் ஆகியோர் நிர்வாக உத்தியோகஸ்த்தர்களாக
கடமையாற்றினார்.