முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்படும் பகுதியில் அகழ்வு

0
253

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலி பெண் போராளிகளது உடல்களாக இருக்கலாம் என சந்தேகப்படும் மனித எச்சங்கள் மற்றும் உடைகள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றைய தினம் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா முன்னிலையில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மனித உரிமை சட்டத்தரணிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொது அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரது கண்காணிப்புகளுக்கு மத்தியில் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த மாதம் 29 ஆம் திகதி மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியபோது நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து கொக்குளாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இது தொடர்பாக கடந்த 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நிலையில்
இன்றைய தினம் அகழ்வு பணியை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டமைக்கு அமைய இன்றைய தினம் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.