மோடி இலங்கைக்கு செல்லக்கூடாது – மாநிலங்களவையில் வைகோ விசனம்

0
45

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாது என இந்தியாவின் மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களின் விடயங்களை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். இலங்கை கடற்படையின் மனிதநேயமற்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இது தொடர்பாக மாநிலங்களவையில் வைகோ கூறியதாவது ……..

‘கடந்த 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். ஜனவரி 25 ஆம் திகதி முதல் 45 நாட்களில் பல்வேறு தாக்குதல்களை இலங்கை கடற்படை நடத்தி இருக்கிறது. ஜனவரி 25 அன்று 3 படகுகளில் இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்தது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.பின்னர் அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இலட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இலங்கை கடற்படையின் மனிதநேயமற்ற இத்தகைய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நமது மீன்பிடி தொழிலை அழிக்க இலங்கை கடற்படை விரும்புகிறது. நமது கடற்படை அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது? நாங்கள் இந்திய அரசுக்கு வரி செலுத்துகிறோம். தமிழக மீனவர்கள் என்ன அனாதைகளா? நமது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்குச் சென்று அந்நாட்டின் ஆட்சியாளர்களைச் சந்தித்தார். நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் அதேபோல் சந்தித்தார். ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது என்ன காரணத்துக்காக நமது பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்கிறார்? இலங்கை அரசுக்கும் அதன் கடற்படைக்கும் கண்டனம் தெரிவிக்கப் போகிறாரா? இன்றும் கூட இராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனர்கள் இந்திய அரசிடம் நீதி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரை சந்தித்து இது தொடர்பாகப் பேசி இருக்கிறார்.

வெளியுறவு அமைச்சரையும் சந்தித்துப் பேசி இருக்கிறார். பலமுறை கடிதம் எழுதி இருக்கிறார். அவை அனைத்துமே குப்பைத் தொட்டியில் போடப்பட்டுவிட்டன . இதுதான் இந்திய அரசு தமிழக மீனவர்களை, இந்தியக் குடிமக்களை நடத்தும் விதமா? இனிமேலாவது, நீங்கள் அங்கே செல்லாதீர்கள்இ அவர்களை இங்கே வரவழையுங்கள். இந்தியக் கடற்படை ஒருமுறையாவது ஒரு துப்பாக்கிச் சூட்டையாவது நடத்தி இருக்கிறதா? இவ்விடயத்தில் இந்தியக் கடற்படையும், இலங்கை கடற்படையும் இணைந்து செயல்படுகிறார்கள். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மொத்த தமிழகமும் இந்திய அரசால் கைவிடப்பட்டது போல் உணர்கிறது.’ எனத் தெரிவித்தார். வைகோவின் உரைக்குப் பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

‘அவையின் மூத்த உறுப்பினர் வைகோ உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். அவரது கவலையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால், அவர் பேசியதில் ஒரே ஒரு வார்த்தை அவர் கோபத்தில் பேசி இருக்கிறார் எனக் கருதுகிறேன். அந்த வார்த்தை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில்இ அது உண்மையல்ல. நமது மீனவர்களைத் துன்புறுத்துவதற்காக நமது கடற்படை, இலங்கை கடற்படையுடன் இணைந்து செயல்படுமா? இந்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

2014ஆம் ஆண்டில் பிரதமர் மோடி பதவியேற்ற உடனேயே, இலங்கை அரசுடன் பேசினார். இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை உயிருடன் திருப்பி அனுப்ப வேண்டும் எனக் கூறினார். நமது மீனவர்களுக்கு உதவுவதற்கான ஒரு வாய்ப்பையும் நாம் வீணடிக்கவில்லை. நமது மீனவர்களுக்கு எப்போது எல்லாம் பிரச்சினை ஏற்பட்டுள்ளதோ அப்போதெல்லாம் நமது வெளியுறவுத்துறை அமைச்சகமும், பிரதமரும் உதவி இருக்கிறார்கள். வைகோவின் கவலைகள் அனைத்தையும் நான் அங்கீகரிக்கிறேன். ஆனால், அந்த ஒரு வார்த்தையை மட்டும் நீக்க வேண்டும் என்று அவைத் தலைவரைக் கோருகிறேன்.’ எனக் குறிப்பிட்டார்.