வடக்கு, கிழக்கில் சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் அபகரிப்பு

0
134

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச கட்டமைப்புகள், பௌத்த பிக்குகள் இணைந்து இந்துக்கள், இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்களை அபகரிப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் வசதியை ஏற்படுத்துகின்றது என சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் வாழும் சிறுபான்மையினரான இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமூகங்களுக்கான மீயுயர் மத சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் அரசாங்கமானது தற்போது நடைமுறையிலுள்ள ‘ஒடுக்குமுறை’ கொள்கைகள் மற்றும் சட்டங்களை முற்றாக நீக்கவோ அல்லது திருத்தியமைக்கவோ நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் ஆணையாளர்களான ஸ்ரீபன் ஸ்னெக், டேவிட்கெரி ஆகியோர் கடந்த மாதம் இலங்கை வந்தனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு மாவட்டங்களுக்கு சென்று நிலைமைகளை அவதானித்ததோடு பல தரப்பினரையும் சந்தித்து பேசியிருந்தனர்.

இந்நிலையில், ஆணைக்குழு உறுப்பினர்கள் அறிக்கை வெளியிட்டு இவ்விடயத்தை தெரிவித்துள்ளனர்.

வெளிப்படைத்தன்மை வாய்ந்த பதிவு செயன்முறையை உறுதிப்படுத்தக்கூடியவாறான வழிகாட்டல்களை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்.

அத்தோடு மட்டுமீறிய ஒடுக்குமுறைகள், கண்காணிப்புகள், வன்முறைகள் மற்றும் வெறுப்புணர்வு பேச்சுகள் போன்றவை பற்றி முறையிடும் மத சிறுபான்மையினருக்கு வலுவான பாதுகாப்பை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.