வவுனியா பல்கலைக்கழக தேவைகள் குறித்து ஆளுநருடன் கலந்துரையாடல்

0
20

வவுனியா பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் சில சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனுடன் பல்கலைக்கழக துணைவேந்தர் அருளம்பலம் அற்புதராஜா தலைமையிலான குழுவினர் இன்று வியாழக்கிழமை ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் நடத்தினர்.

இதன்போது, பல்கலைக்கழக மாணவர் விடுதி மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கான தங்குமிடம் தொடர்பில் ஆராயப்பட்டது. இவற்றை அமைப்பதற்கான காணிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் ஆளுநருடன் ஆலோசனை நடத்தினர்.

மேலும், பல்கலைக்கழகத்துக்கான புதிய கட்டடங்களை அமைப்பதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு கொடையாளிகளின் உதவியைப் பெற்றுத்தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

மன்னார் மாவட்டத்தில் தமது பல்கலைக்கழகத்தின் புதிய பீடத்தை ஆரம்பிப்பதற்கான திட்டமுன்மொழிவு தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பில் வவுனியா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நடராஜா ராஜவிசாகன், வவுனியா பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரிவின் உதவிப் பதிவாளர் திருமதி தவகிருபா பிரணவமலர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.