அக்கரைப்பற்று பனங்காடுபட்டி நகர்
கண்ணகி அம்மன் ஆலய சடங்கு

0
291

அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பனங்காடுபட்டி நகரில் குடிகொண்டுள்ள கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி பூரணை திருக்குளிர்த்தி சடங்கு நேற்று மாலை பெருந்திரளான மக்களின் அரோகரா வேண்டுதலின் மத்தியில் இடம்பெற்றது

கண்ணகி வரலாற்றுடன் தொடர்புடைய கண்டிய மன்னரின் மானியம் பெற்றதும் முக்காவிய புகழ் பெற்றதும் பொற்புறா வந்த காவியம் பாடப்பட்டதுமான இவ்வாலயத்தின் திருக்குளிர்ச்சி; திருக்கதவு திறக்கும் வழிபாடுகளுடன் ஆரம்பமானது.

தொடர்ந்து 12ஆம் திகதி வரை நடைபெற்ற விசேட அபிசேக மூன்று காலப்பூஜைகளுடன் கடந்த 13ஆம் திகதி இரவு கல்யாணக்கால் நடும் நிகழ்வும் நேற்று 14ஆம் திகதி திருக்குளிர்த்தி மற்றும் பக்தர்களின் நேர்கடன் பொங்கல் ஆகியவற்றுடன் இன்று கவடாப்பிட்டி பிள்ளையார் ஆலய பொங்கல் மற்றும் ஜயனார் வைரவர், நாகேஸ்வரர் பூஜையுடனும் நிறைவு பெற்றது.

திருக்குளிர்த்தியை முன்னிட்டு நேற்றுகாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையிலான பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அக்கரைப்பற்று அன்புத்தோழர்கள் அமைப்பு புண்ணியமூர்த்தி நவனீதன் உள்ளிட்டவர்கள் மோர்ப்பந்தல் அமைத்து தாகசாந்தி ஏற்பாட்டினை மேற்கொண்டதுடன் ஆலய நிருவாகத்தின் ஏற்பாட்டில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

ஆலய தலைவர் க.கார்த்திகேசுதலைமையில் இடம்பெற்ற திருக்குளிர்ச்சி வழிபாடுகளை ஆலய பூசகர் கு.ரவீந்திரநாதன் தலைமையிலான பூசகர்கள் நடாத்திவைத்தனர்.