அணுமின் நிலைய கட்டமைப்பை இலங்கையில் நிறுவும் ரஷ்யா!

0
192

அணுமின் நிலைய கட்டமைப்பு ஒன்றை இலங்கையில் நிறுவ ரஷ்யா முன்வந்துள்ளது.

இந்த அணுமின் நிலைய கட்டமைப்பு தரையில் அல்லது கடல்பரப்பில் நிறுவப்படும்.
எனினும், இது தொடர்பில் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்படவுள்ள செயல்திட்டம் என இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் எஸ். ஆர். டி. ரோஸா தெரிவித்துள்ளார்.

அணு மின் நிலையத்தை நிலப்பரப்பில் அமைப்பதா அல்லது கப்பலில் பொருத்தி கடல்பரப்பில் செயல்படுத்துவதா என்பது தொடர்பாக இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய, ரஷ்யாவை சேர்ந்த ஒரு குழு ஊடாக மின் உற்பத்தி நிலையத்தை இயக்குவதற்கும், சுமார் மூன்று வருடங்களுக்குள் இலங்கையில் ஒரு குழுவினருக்கு அதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் ‘றோசரொம் ஸ்டேட் நியூகிளியர் எனர்ஜி’ நிறுவனம் இதற்கான திட்ட முன்மொழிவை முன்வைத்துள்ளது.

100 மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மூன்று சிறிய கடல் அணு மின் நிலையங்களை தேர்ந்தெடுக்கும் சாத்தியம் இலங்கைக்கு உள்ளது எனவும் இலங்கை அணுசக்தி சபை தெரிவித்துள்ளது.

இதற்கான முதலீடுகள், சலுகைக்காலம் மற்றும் திருப்பிச் செலுத்தும் காலம் ஆகியவற்றை நிர்ணயம் செய்வதற்காக பங்களாதேஷூடன் ரஷ்யா செய்துள்ள ஒப்பந்தத்தை இலங்கை தற்போது ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.