அதிக செலவீனம் கொண்ட மாவட்டம் கொழும்பு?

0
91

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான வறுமைக்கோடு தொடர்பான புதிய அட்டவணையை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மாதாந்தம் 17 ஆயிரத்து 14 ரூபாய் அவசியம் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய மட்டத்தில் இந்த தொகை அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாவட்டங்கள் தோறும் இந்த தொகையில் மாற்றம் ஏற்படுகின்றது.

கொழும்பு மாவட்டத்தில் தனிநபரின் மாதாந்த செலவு 18 ஆயிரத்து 350 ரூபாவாக காணப்படுகின்றது.

இதற்கமைய, இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் அதிக செலவீனத்தைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் அமைந்துள்ளது.

குறைந்த செலவீனத்தைக் கொண்ட மாவட்டமாக மொனராகலை மாவட்டம் பதிவாகியுள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் தமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு, ஒருவருக்கு மாதாந்தம் 16 ஆயிரத்து 268 ரூபாய் தேவைப்படுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நான்கு பேர் கொண்ட குடும்பமொன்றுக்கு தங்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மாதாந்தம் 68 ஆயிரத்து 560 ரூபாய் தேவைப்படுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.