முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 95வது பிறந்ததினம், யாழ்ப்பாணம் – வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலில் இன்று நினைவுகூரப்பட்டது.வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்றலில் அமைந்துள்ள அமிர்தலிங்கத்தின் திருவுருவசிலைக்கு முன்பாக காலை 8.00 மணியளவில் பண்ணாகம் அண்ணா கலை மன்றம் மற்றும் பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அமர்ந்தலிங்கத்தினுடைய திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
95வது பிறந்ததினத்தை நினைவுகூரும் முகமாக தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனால் கேக் வெட்டப்பட்டு பரிமாறப்பட்டது.
பிறந்தநாள் நிகழ்வின் போது தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.நடனேந்திரன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தமிழரசு கட்சி உறுப்பினர்கள், பண்ணாகம் அண்ணா கலை மன்றத்தினர், பண்ணாம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.