அம்பாறையில் பௌத்த தேரர் மீது தாக்குதல்: பொலிஸாரைச் சாடுகிறார் விமலவீர திசாநாயக்க எம்.பி

0
239

அம்பாறை தமண பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றின் தேரரொருவர் தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பாக
நடக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினருமான விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
‘கடந்த ஜுலை 10 ஆந் திகதி மாலை 7 மணியளவில் தேரர் ஒருவர் சிலரால் தாக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தேரர் மீது ஐவர் கொண்ட குழு தாக்குதல் மேற்கொண்டிருந்ததாக அறிய முடிகின்றது.தற்போது தாக்குதல் இடம்பெற்று 6 நாட்கள் கடந்தும் கூட பொலிஸாரால்
உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தேரரை தாக்கியவர்கள் என கூறப்படுபவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள்.இவர்களுக்கு அரசியல் புலம் உள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தேரர் அப்பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த போராட்டத்தில் பங்கேற்பதற்கு சென்றவர்களுக்கு அறிவுரை கூறியதன் பின்விளைவே தாக்குதல் காரணமாக அமைந்திருக்கின்றது.
பொலிஸார் இவ்விடயத்தில் அமைதியாக உள்ளனர்.
இதில் தமண பொலிஸ் பொறுப்பதிகாரி பொறுப்பு கூற வேண்டியவர். இவர் பாரபட்சமாக உள்ளதாகவே மக்கள் தெரிவிக்கின்றனர். இத்தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு பொலிஸார் இருக்கின்றனர்.எமது நாட்டின் சட்டம் எங்கே செல்கின்றது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது. தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் 2 பேரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக பிந்திய தகவல் கிடைத்தது.
ஆனால் இந்த தாக்குதல் விடயத்தில் பக்கச்சார்பாக பொலிஸார் நடப்பது என்பது ஏற்கமுடியாது. இவ்விடயத்தை சாதாரணமாக கடந்துவிட முடியாது. மக்கள் போராட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவே இவ்விடயத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்’. எனக் குறிப்பிட்டார்.