அம்பாறை மாவட்டத்தில் பெய்துவந்த பருவ மழை சில தினங்கள் ஓய்ந்திருந்திருந்த நிலையில், நேற்று இரவு முதல் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக, அம்பாறை மாட்டத்தின் பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள பல வீதிகளில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.
தற்போது பெய்து வரும் அடை மழைகாரணமாக, மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ள இதேவேளை, கொரோனா வைரஸ் அச்சம் நிலவி வரும் இக்காலகட்டத்தில் மக்கள் மிகப்பெரும் அசௌகரியத்தை தற்போது எதிர்நோக்கி வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில், நிந்தவூர், ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், அறுவடைக்கு தயார் நிலையிருந்த பல ஏக்கர் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்துடன், வீதிகளில் வெள்ளம் தேங்கி நிற்பதுடன், பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த வெள்ள நிலைமையை கருத்திற்கொண்டு, அப்பகுதிகளிலுள்ள முகத்துவாரங்கள் திறக்கப்பட்டு, வெள்ள நீரை கடலுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.