அரசாங்கத்துக்கு எதிராக அடுத்த நாடாளுமன்ற அமர்வில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கு இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
எரிபொருள் விலை ஏற்றம் உள்ளிட்ட அரசாங்கத்தின் சில அசமந்தச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் எமது செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேகக் குரல்பதிவிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்து கூடும்போது அதனை தீர்மானிப்பதற்கு உள்நாட்டில் ஒரு அரசாங்கம் தேவையில்லை என்று கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
தற்போது உலகசந்தையில் அதிகரிக்கப்பட்ட விலையைவிட உள்நாட்டில் பன்மடங்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது
வரலாற்றில் என்றுமில்லாத அளவு விலை அதிகரிப்பாகவே இதனை நாம் காணுகின்றோம்.
ஆனால் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காகவே இந்த விலை அதிகரிப்பு என்று ஜனாதிபதி கூறுகின்றார்.
இன்னும் சில நாட்கள் சென்றால் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகக் கூறி சமையல் எரிவாயுவின் விலையையும் ஜனாதிபதி அதிகரிப்பார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதாகக் கூறி ஆளுங்கட்சியினர் ஒரு நாடகத்தை நடத்தி வருகின்றனர்.
நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் எடுத்த ஒரு முடிவை கட்சியின் பொதுச்செயலாளர் கேள்விக்குள்ளாக்கியமை ஒரு நகைப்புக்குரிய விடயம்.
இந்தக் கட்சி முன்னெடுத்துவரும் கேலிக்கைக்குரிய விடயங்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். எனவே ஆளுங்கட்சியிலுள்ள அனைவருக்கும் எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.
இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று (15) எடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற்றுக்கொள்வதற்கு கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.