அரசாங்கத்தைப் பார்த்து மக்கள் சலிப்படைந்துவிட்டனர். மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கும் யுகமே உருவாகியுள்ளது. அன்றைய நாளுக்கான பிழைப்புப் பயணத்தையே அரசாங்கம் தற்போது மேற்கொள்கின்றது என்று, ஐக்கிய இளைஞர் சக்தியின் தேசிய அமைப்பாளர் சமித் விஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்புகளை நடத்தி கருத்து கூறுவதில் பயனில்லை. இன்று அரசாங்கத்தைப் பார்த்து மக்கள் சலிப்படைந்துள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைகளை பொறுப்படுத்தாத அரசாங்கங்கத்தின் செயற்பாட்டால், அதிகாலை 3 மணிக்கே மக்கள் வரிசையில் நிற்பதை ஊடகங்களில் பார்த்தோம்.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் காலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டு மாலையில் மீண்டும் நியமிக்கப்பட்டார். அரிசியை இறக்குமதி செய்ய மாட்டோம் என்று விவசாய அமைச்சர் கூறுகினார். ஆனால் அரிசியை இறக்குமதி செய்கின்றனர். ஜனாதிபதி சிம்மாசன உரையை நிகழ்த்திய பின்னர் நாட்டில் டொலர்கள் இல்லை என மக்களிடம் கூறினார். விவசாயப் பிரச்சினையை மீண்டும் மீண்டும் கூறுகின்றார்.
இவை அனைத்தையும் ஜனாதிபதி புதிததாகக் கூற தேவையில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன என்பதே எமது எதிர்பார்ப்பு. இவற்றுக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். தவறு இருந்தால் பரவாயில்லை. குறைந்த பட்சம் தீர்வு காண வேண்டியது ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
பிரச்சினைகள் பற்றி மக்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. தீர்வுகளையே சொல்லியிருக்க வேண்டும்.
ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியுள்ள நிலையில் வன அழிப்பு 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இது மற்றுமொரு சாபக்கேடு. ஆளுந்தரப்பு உறுப்பினர்களுக்கு மரங்களை பார்த்தால் சும்மா இருக்க முடியவில்லை.
வெள்ளை யானை திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து இன்று மக்களுக்கு உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.