மஸ்கெலியா பிரதான வீதியில் பேருந்து மோதி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மஸ்கெலியா பிரதான வீதியில் நேற்று இரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டு மஸ்கெலியா தோட்டத்தை சேர்ந்த 70 வயதுடைய ராமசாமி சுப்பிரமணியம் (சப்பானி) என்பவர், அவிசாவளை அரச பேருந்து நிலையத்திற்கு சொந்தமான பேருந்து மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் பொலிஸார், விபத்திற்குள்ளாகிய நபரை மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
அவரது சடலம் மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் தமயந்தி சடலத்தைப் பார்வையிட்ட பின்னர் சடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பிரேத பரிசோதனையில் பேருந்தில் மோதுண்டு பலியாகியமை தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டதுடன் பேருந்தும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.