கொரோனா தடுப்பூசி வழங்கல் ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு ஆலையடிவேம்பில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.
‘ஐக்கியமாக ஒரேமனதுடன் வலுவாக’ எனும் கருப்பொருளுக்கமைவாக பெருந்தொற்றுக்கு சவால் விடுத்த மனித நேயத்திற்கு செய்யும் மரியாதை எனும் நோக்குடன் கொரோனா தொற்றை தடுப்பதற்கு அரும் பணியாற்றியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்றது.
இதன் ஒருகட்டமாக அக்கரைப்பற்று யங்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் எற்பாட்டில் அக்கரைப்பற்று 9 பிரிவின் பல்தேவைக் கட்டடத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஹ.டிலக்ஷன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திகுழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீரசிங்கவின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளருமான சிந்துஜா பிரதீபன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் கே.சசீந்திரன் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மருத்துவர்கள் தாதிகள் கிராம உத்தியோகத்தர் என பலரும் கலந்துகொண்டனர்.