தேர்தல்களின்போது பொதுஜன பெரமுனவின் பிரசாரங்களில் பங்கேற்றவர்கள் தற்போது சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறானவர்களால் எவ்வாறு சுயாதீன தலைமைத்துவத்தை வகிக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வியெழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
தற்போது சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ள சிலர் பொதுஜன பெரமுனவின் தேர்தல் வெற்றிக்காகச் செயல்பட்டவர்களாவர்.
இவ்வாறானவர்களால் எவ்வாறு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தலைமைத்துவம் வகிக்க முடியும்?
பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதாகக் கூறிய இந்த அரசாங்கம், கல்வியில் கீழ் மட்டத்திலுள்ளவர்களை அலுவலகங்களில் அமர்த்தியிருக்கிறது. ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறிய அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தையும் மக்களின் உரிமையையும் இல்லாது ஒழித்துள்ளது.
அரசாங்கம் இவ்வாறு செயல்பட்டாலும் மக்களுக்கான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி மிகவும் பொறுப்புடன் அதன் கடமைகளை நிறைவேற்றும்.
கொரோனா தொற்று அச்சுறுத்தால் முடங்கியுள்ள மக்கள் எதிர்வரும் நாள்களில் அரசாங்கத்துக்கு எதிராகக் களமிறங்கிப் போராடுவார்கள் எனத் தெரிவித்தார்.