யாழ்ப்பாணம், இணுவில் ரயில்; கடவையில், புகையிரதம் மோதி வானில் பயணித்த இருவர் உயிரிழந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால், சமிக்ஞை விளக்கு மற்றும் பாதுகாப்பு கதவு பொருத்தப்பட்டு, அதன் செயற்பாடு, நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி, வானில் பயணித்துக் கொண்டிருந்த இளம் குடும்பத்தினர், பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட போது, புகையிரதம் மோதியது.
இதில், தந்தையும் குழந்தையும் உயிரிழந்தனர். விபத்தை தொடர்ந்து, பிரதேச மக்களால், ரயில் கடவையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, அந்தப் பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களுடன் கலந்துரையாடி, பாதுகாப்பற்ற ரயில் கடவைக்கு தற்காலிக தீர்வொன்றை உடனடியாக அமுல்படுத்தியதுடன், நிரந்தர தீர்வாக, ஓசை எழுப்பும் வகையிலான விளங்கு மற்றும் பாதுகாப்பு கதவு அமைக்கும் நடவடிக்கைகளை, சம்மந்தப்பட்ட அரசாங்க தரப்புக்களின் ஊடாக முன்னெடுத்தார்.
அதனடிப்படையில், சுமார் 80 லட்சம் ரூபா செலவில், ரயில் திணைக்களத்தினால் பொருத்தப்பட்ட சமிக்ஞை விளக்கு கட்டமைப்பின் செயற்பாடுகளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நேற்று மாலை ஆரம்பித்து வைத்துள்ளார்.