இலங்கைக்காக இந்திய துணைத்தூதவர் எம்.நடராஜ் நேற்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்ததுடன் இன்று மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்திற்கு விஜயம் செய்தார்.
விஜயம் செய்த துணைத்தூதுவரை சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பாரதி கெனடி தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.
இதன்போது பல மில்லியன் ரூபா செலவில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் அமைக்கப்படவுள்ள ஒன்றுகூடல் மண்டபத்தின் நிர்மாணப்பணிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
தற்போதைய விலைவாசி உயர்வு காரணமாக குறித்த ஒன்றுகூடல் மண்டபத்தினை அமைப்பதற்கான செலவுகள் அதிகமாகவுள்ளதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட தொகையினை விட அதிகளவான செலவுகள் ஏற்படும் என்பது தொடர்பில் துணைத்தூதுவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து நிதியின் அளவினை அதிகரிக்க நடவடிக்கையெடுப்பதாக துணை தூதுவர் உறுதியளித்தார்.
அத்துடன் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறைக்கு தேவையான உதவிகள் மற்றும் நிறுவகத்திற்கு தேவையான புத்தகங்களை வழங்கவும் துணைதூதுவர் உறுதியளித்தார். இந்த சந்திப்பில் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் துறைத்தலைவர்கள்,விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.
இதனிடையே, இந்திய அரசாங்கத்தின் உதவிகள் இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் சமமாகவே வழங்கப்படுவதாகவும் எந்த பிரிவினையையும் இந்திய அரசாங்கம் பார்ப்பதில்லையெனவும் இலங்கைக்காக இந்திய துணைத்தூதவர் எம்.நடராஜ் கருத்து தெரிவித்தார்.