எமது நாட்டின் கிரிக்கெட்டை தடைசெய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு எழுத்துமூலம் கடிதம் அனுப்பியுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தேசத் துரோக செயற்பாட்டில் ஈடுபட்டதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நாட்டை காட்டிக்கொடுத்ததற்கான கடிதம் எனக்கு கிடைத்துள்ளது.
கிரிக்கெட்டை தடைசெய்யுமாறு கடந்த ஏழாம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கிரிக்கெட் பேரவையினால் விதிக்கப்பட்ட தடைக்கு நான் தான் காரணம் என திரைப்படம் ஒன்று திரையிடப்பட்டது. ஆனால் அதன் உண்மைத்தன்மை இப்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இலங்கை கிரிக்கெட்டை தடைசெய்யுமாறு கிரிக்கெட் நிறுவனமே கடிதம் அனுப்பியிருக்கிறது.
அந்தக் கடிதம் கிரிக்கெட்டுடன் தொடர்புடைய ஏனைய நாடுகளுக்கும் பிரதியிடப்பட்டுள்ளது.
இவர்கள் தேசத் துரோகம் செய்திருக்கிறார்கள்.
நாட்டுக்கு ஒரு கறுப்புப் புள்ளியை உருவாக்கியிருக்கிறார்கள்.
கிரிக்கெட் தடைக்கு நாடாளுமன்றம் பொறுப்புக் கூற வேண்டும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகைதரவிருந்த 800 வீரர்களின் வருகை தடைபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறாயின் அதற்கு கிரிக்கெட் நிறுவனமே காரணம் என்பது இப்போது புலனாகியிருக்கிறது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையை இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் தவறாக வழிநடத்தியிருக்கிறார்கள்.