இலங்கை போக்குவரத்து சபை சாரதிகளால் இழைக்கப்படும் தவறுகளை ஆவணப்படுத்தும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து விசாரணை பிரிவின் முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்தார்.
சாரதிகளின் அசமந்தப் போக்கு காரணமாக ஏற்படும் விபத்துகளை தடுத்து, பயணிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே இந்த திட்டம் முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தின் கீழ் சாரதிகளுக்கு தகுதிப் பரிசோதனை புத்தகமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதுடன், அண்மைக் காலங்களில் இ.போ.ச. பஸ்கள் விபத்துக்குள்ளாவதை கருத்திற்கொண்டும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இ.போ.ச. விபத்து விசாரணை பிரிவின் முகாமையாளர் தெரிவித்தார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இ.போ.ச.வுக்கு சொந்தமான 218 பஸ்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பதிவாகியுள்ளது.
இந்த விபத்துகள் காரணமாக இ.போ.ச. வருடமொன்றுக்கு 30 முதல் 40 மில்லியன் ரூபாய் வரையிலான நஷ்ட ஈட்டை செலுத்தவேண்டி ஏற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.