2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வழங்கிய சில உத்தரவுகளை விசாரணை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்ட குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (சிஐடி) 31அதிகாரிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்புடைய குறைந்தது 700 அதிகாரிகளுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்ததாக பிரேமதாச மேலும் தெரிவித்தார்.இந்த உத்தரவுகள் தொடர்பில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
தாக்குதல்கள் தொடர்பான உண்மையைக் கண்டறியும் உள்நாட்டு முயற்சிகள் ஊழல் நிறைந்ததாக இருப்பதால், இது தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை.ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக செயற்பட்ட சஹாரான் அரச புலனாய்வு அதிகாரி ஒருவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், இந்த அதிகாரியை விசாரிக்க வேண்டாம் என உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதையும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.