மட்டக்களப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு பொலிஸ் நிலைய காவலில் இருந்த போது கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 03ம் உயிரிழந்த விதுசனின் வழக்கு விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் பெற்றோரினால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இளைஞனின் உடல் பரிசோதனைகாக சடலம் கடந்த 2021 ஜூன் மாதம் 21 ஆம் திகதி தோண்டியெடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதனை பல்கலைக்கழக பேராசிரியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது
பிரேத பரிசோதனைக்காக பேராதனை பல்கலைக்கழக பேராசிரியருக்கு அனுப்பி வைக்கப்பட்ட சடலம் ஒரு வருடமும் நான்கு மாதங்கள் கடந்த நிலையில் பேராதனை பல்கலைக்கழக பேராசிரியரினால் குறித்த இளைஞனின் சடலம் நேற்றைய தினம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 03ம் திகதி இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தெரிவித்து விதுசன் என்ற இளைஞர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞன் பொலிஸ் காவலில் இருந்த போது உயிரிழந்துள்ளார்
இதன்போது குறித்த இளைஞன் ஐஸ் போதைப்பொருள் பக்கட்டை விழுங்கியதால் அது வயிற்றினுள் வெடித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது , அதனை குறித்த இளைஞனின் பெற்றோர் மறுத்திருந்ததுடன் தனது மகனை பொலிஸார் தாக்கியதாலேயே உயிரிழந்திருந்ததாக பெற்றோர் தெரிவித்திருந்தனர்.
குறித்த இளைஞனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இளைஞனின் உடல் பரிசோதனைக்காக பேராதனை பல்கலைக்கழக பேராசிரியருக்கு அனுப்பிவைக்கப்பட்ட சடலத்தை ஒக்டொபர் மாதம் 19ஆம் எடுத்துக்கொள்ளப்படவுள்ள வழக்கு விசாரணைக்கு முன்னதாக உடலை கையளிக்குமாறு பொலிஸாருக்கு நீதிபதியினால் விடுக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய பேராதனை பல்கலைக்கழக பேராசிரியரினால் குறித்த இளைஞனின் சடலம் நேற்றைய தினம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த விதுசனின் உடல் ஒருவருடம் நான்கு மாதங்களுக்கு பின் நேற்றைய தினம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு மட்டக்களப்பு கத்தோலிக்க சேமக்காலையில் உறவினர்களினால் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. குறித்த இளைஞனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஒக்டொபர் மாதம் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.