ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் இருண்ட யுகத்தை ஞாபகப்படுவத்துவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட இருண்ட காலத்தை நினைவூட்டும் வகையில் இரண்டு சம்பவங்களை எமக்கு கேட்க நேர்ந்தது.
ஒன்று சமுதித சமரவிக்ரம என்ற ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோன்று சமூக செயற்பாட்டாளராக பணியாற்றிவரும் செஹான் மாலக்கவை கடத்தி செல்லும் போர்வையில் அவர் கைசெய்யப்பட்டுள்ளார்.
இந்த இரு சம்பவங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி என்ற முறையில் நாம் அனுமதிக்கப்போவதில்லை.
அதேபோன்று தங்களது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிப்பர்களை கொலை செய்வது, அவர்களது அவயங்களை வெட்டுவது, கடத்தி சென்று காணாமல் ஆக்குவது போன்ற சம்பவங்கள் 2015ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தன. ஊடகங்களை ஒடுக்கும் செயற்பாடு முன்பிருந்தது.
ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறை இருந்த யுகம் ஒன்று காணப்பட்டது. ஊடக சுதந்திரம் தொடர்பில் காணப்பட்ட இருண்ட யுகத்தை எமது நல்லாட்சி அரசாங்கத்தில் ஊடக அமைச்சர் என்ற முறையில் முற்றுமுழுதாக மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டேன்.
தமது உயிரை பாதுகாத்துக்கொள்வதற்காக ஊடகவியலாளர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றிருந்தனர்.
எமது நல்லாட்சி அரசாங்கத்தில் ஊடக சுதந்திரம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டது. உயிரை பாதுகாத்துக்கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு சென்றிருந்த பல ஊடகவியலாளர்கள் நாடு திரும்பி சுதந்திரமாக எழுதத் தொடங்கினர். அதேபோன்று ஊடக சுதந்திரத்தை முழுமையாக பெற்றுக்கொடுத்தோம்.
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர், அரசாங்கம் என அனைத்துத் தரப்பினரையும் சுதந்திரமாக விமர்சிப்பதற்கான உரிமை எமது நல்லாட்சியில் ஊடகவியலாளர்களுக்கு இருந்தது.
தங்களது பிள்ளைகள், குடும்பத்துடன் அச்சமின்றி ஊடகவியலாளர் வாழ்வதற்கான ஒரு சூழல் எமது ஆட்சியில் காணப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.