இன்னும் எத்தனை வருடங்களானாலும் எமது இனத்தை யாராலும் அழித்துவிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு: ‘
நான் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் வந்ததாகச் சிலர் இங்கு கூறுகின்றனர். நான் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் அதிக விருப்புவாக்குகளைப் பெற்றுக்கொண்டே இந்தப் பாராளுமன்றம் வந்துள்ளேன் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
மட்டக்களப்பில் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 26, 27, 28ஆம் திகதிகளில் முகப்புத்தகத்தில் சில பதிவுகளை இட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
29 வயது அரச ஊழியர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். முகப்புத்தகத்தில் சில பதிவுகள் இடப்பட்டுள்ளதாம். இதன் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதுவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்துள்ள அரசாங்கம் அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
முகப்புத்தகத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தவர்களை பொலிஸார் கைதுசெய்வது என்பது அரசாங்கத்தின் இயலாமையை மூடிமறைக்கும் செயலாகும்.
இவர்களைக் கைது செய்வதற்கு பதிலாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்து சிறையிலடையுங்கள்.
அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை வைக்க வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக்கொள்ளுகின்றேன். அதேபோன்று அரசாங்கம் ஏனைய விடயங்களை மறைப்பதற்காக இவ்வாறு அப்பாவி இளைஞர்களைக் கைது செய்வதை நிறுத்த வேண்டும்.
கார்த்திகை விளக்கீடு என்பது ஒரு பண்டிகை. இப்படியான பண்டிகை நாளில் பொலிஸார் கார்த்திகை விளக்கேற்ற தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒருசில இடங்களில் மக்கள் விளக்கை ஏற்றுவதற்காக சிறிய அலங்காரங்களைச் செய்திருந்தனர். இதனையும் பொலிஸார் எட்டி உதைத்துள்ளனர்.
நீங்கள் உண்மையான பௌத்தர் என்றால் மனிதத்துவதுக்கு மரியாதை செலுத்த முதலில் பழகிக்கொள்ளுங்கள்.
உண்மையிலேயே இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்கள் பாவம். பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றியபோது, சரத் வீரசேகர உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்தமை காரணமாகவே இவ்வாறு எதிர்ப்பை வெளியிட முடிந்ததாகக்கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.
இவ்வாறு செய்து கொண்டு நீங்களே நாட்டில் பிரச்னைகளை உருவாக்குகின்றீர்கள்.
நீங்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து சஹ்ரானை உருவாக்கியதாக கூறுகின்றீர்கள். நீங்கள் நாட்டில் பிரச்னைகளை தோற்றுவிக்கின்றீர்கள். நீங்களே சஹ்ரானை உருவாக்கினீர்கள்.
நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களைப் புதைக்க தொடர்ந்தும் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
அவர்கள் தங்களுக்கு இறுதியாகவுள்ள உரிமையையே கேட்கின்றனர். அதனை வழங்க இந்த அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.
இவ்வாறான செயல்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.