மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதையடுத்து ஏறாவூரில் அடையாளப்படுத்தப்பட்ட முதலாவது பிரதேசம் இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதானவீதி தொடக்கம் காட்டுப் பள்ளிவாயல் வீதி, அஸ்ஹர் பாடசாலை வீதி மற்றும் ஓடாவியார் வீதி ஆகிய பாதைகளுக்கிடைப்பட்ட ஏறாவூர்- 2 என்ற கிராம சேவை அதிகாரி பகுதி தற்போது தனிமைப்படுத்தப்படுத்தப்;பட்டுள்ளது.
இப்பிரதேசத்திற்கான உள்ளக பாதைகளில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதுடன் இராணுவம் மற்றும் பொலிஸாரும் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கொரோனா மூன்றாம் அலையில் மாத்திரம் சுமார் 140 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் காலத்தில் குறித்த பகுதி மக்கள் பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய பொருள் விநியோகத்தினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜுத் தெரிவித்தார்.