எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு, தமிழ் மக்கள் பொதுச்சபையின் செயற்பாட்டாளர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் தலைமையில்
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது.

இந்த உடன்படிக்கையில் தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை சம தரப்பினர் எனும் வகையில் இரு தரப்பினரின் இணைவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கட்டமைப்பு தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பாக தொடர்ந்து இயங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த புரிநதுணர்வு உடன்படிக்கையில் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் சார்பில் அதன் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ் தேசிய கட்சியின் சார்பில் அதன் தலைவர்; நல்லதம்பி ஸ்ரீகாந்தா,
அரசியல் சமூக செயற்பாட்டாளர்களான ந.வசந்தராஜா, இராசலிங்கம் விக்னேஸ்வரன், செல்வின் இரேனியல், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் சட்டத்தரணி ஆ.யோதிலிங்கம், யாழ் பல்கலைக்கழக அரசியல் துறை பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம், அரசியல் விமர்சகர்களான ஏ.ஜதீந்திரா, ம.நிலாந்தன் ஆகியோர் குறித்த உடன்படிக்கையில் கையொப்பமிடப்பட்டனர்.
இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் மக்கள் பொதுச்சபைகள் உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.












