கல்முனையில் கொவிட்-19 அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராய்வும் விசேட கூட்டம்

0
173

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட்-19 அசாதாரண சூழ்நிலை தொடர்பாகவும், கல்முனை பிரதேசத்தில் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் சம்மந்தமாகவும் பயணத்தடை நேரங்களில் மக்களின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் விசேட கூட்டம் கல்முனைக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் பள்ளித் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்றது.

நாட்டில் கொரோனா பரவல் நிலை அதிகரித்துள்ளதன் காரணமாக ஒவ்வொரு பிரதேசங்களிலும் பிரதேச மக்களை அடிப்படையாகக் கொண்ட கொரோனா தடுப்பு செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் முப்படையினர் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுசரணையுடன் கொரோனா தடுப்பு செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள இச்செயலணிக்கு கல்முனை மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதன் பிரகாரம் குறித்த செயலணி சில விடயங்கள் தொடர்பாக அவதானமாக இருக்கும் என்பதுடன் இன்றுமுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு அதனை மீறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறு எந்த தேவைகளுக்காகவும் வீதிகளில் வாகனங்களில் பயணித்தல், இளைஞர்கள் குழுக்களாக சேர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வீதிகளில் வீணாக சுற்றித் திரிதல், மீன் பிடிப்பவர்களைத் தவிர ஏனையோர் கடற்கரைகளில் அனாவசியமாக கூடி இருத்தல், அத்தியாவசிய பொருட்களுக்காக அனுமதிக்கப்பட்ட இடங்களில் அதிகமானோர் கூடி இருத்தல், வீதிகள் மற்றும் மைதானங்களில் இளைஞர்கள் விளையாட்டுக்களில் ஈடுபடுதல், சரியான முறையில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றாதோர், வெளி ஊர்களிலிருந்து யாசகம் கேட்டு வருபவர்களை தடை செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எனவே குறித்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் கொரோனா தடுப்பு செயலணிக்கு தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குவதோடு கொரோனா நோயிலிருந்து கல்முனை பிரதேசத்தையும் நாட்டையும் பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இக் கூட்டத்தில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர் எம் அஸ்மி, கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.பாரூக், திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.ஹபீலுல் இலாஹி, கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜௌபர், சிரேஸ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம் பாரூக் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபையினர், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.