கல்முனையில் நடமாடும் வியாபாரம் மூலம் மாட்டிறைச்சி விற்பனைக்கு நடவடிக்கை

0
196

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் மாட்டிறைச்சியை நடமாடும் வியாபாரம் ஊடாக மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபை எல்லையினுள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கும் பொருட்டு, இதனை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் மாநகர முதல்வர் செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தை அடுத்து, கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மாட்டிறைச்சி வியாபாரிகள் அனைவரும் மாநகர சபைக்கு அழைக்கப்பட்டு, இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடலில் மாட்டிறைச்சியை நடமாடும் வியாபாரம் ஊடாக விற்பனை செய்வதற்கான ஒழுங்கு விதிகள் மற்றும் சுகாதார நடைமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்டன.

இவற்றை அனைத்து மாட்டிறைச்சி வியாபாரிகளும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என பணிக்கப்பட்டதுடன் மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நடமாடும் வியாபாரத்திற்காக மாட்டிறைச்சி வியாபாரிகளுக்கு விசேட அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.