இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுரு பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் பிணைகாரர்கள் வருகை தராமையினால் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை ஒன்றில் வைத்து 3 இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு நேற்று கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதான சந்தேகநபரான பௌத்த மதகுருவுக்கு பிணை வழங்கப்பட்டதுடன், வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது.
இரு தரப்பினர் சார்பிலும் ஆஜரான சட்டத்தரணிகளின் சமர்ப்பணம் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு சந்தேக நபரான பௌத்த மதகுரு தொடர்புபட்ட 3 வழக்குகளில் தலா 3 பேர் வீதம் 9 பேர் கொண்ட 5 இலட்சம் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல வேண்டும் மாதத்தின் 4 வாரம் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பம் இடுதல் குறித்த வழக்கின் சாட்சிகள் குடும்பத்தினரை அச்சுறுத்துதல் வழக்கு தொடர்பிலான தலையீடு செய்யாதிருத்தல் வேண்டும், கடவுச்சீட்டினை மன்றிற்கு ஒப்படைத்தல் வேண்டும் அவ்வாறு தன்னிடம் கடவுச்சீட்டு இல்லை எனின் உரிய தரப்பினரின் உறுதிப்படுத்தி மன்றிற்கு தெரிவிக்க வேண்டும் கிராம சேவகரின் நலச்சான்றிதழ் சமரப்பிக்க வேண்டும் என்ற கடும் நிபந்தனையுடன் குறித்த பௌத்த மதகுரு பிணையில் விடுவிக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை மறுவிசாரணைக்காக குறித்த வழக்கினை கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
அம்பாறை மாவட்டம் சடயந்தலாவை பகுதி ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 இளம் பிக்குகள் கல்முனை பகுதி விஹாரை ஒன்றில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்றின் அடிப்படையில் செப்டம்பர் 13 ஆந் திகதி கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதியாக ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் என்றழைக்கப்படும் பிரதான பௌத்த மதகுரு அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் விசேட பிரிவினரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.