கல்முனை போராட்டம்: அம்பாறை அரசாங்க அதிபருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை

0
205

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரினால் அப்பிரதேச மக்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் தலைமையில் பொதுமக்கள் கல்முனை பிரதேச செயலகம் கல்முனை மாநகர சுகாதாரப்பிரிவு நகர அபிவிருத்தி அதிகார சபை அமைந்துள்ள கட்டிடத்தொகுதியின் பிரதான கதவை மூடி வழிமறித்து தமது சுகாதார பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தீர்வை வழங்க வேண்டும் என கோரி நேற்று காலை முதல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்த நிலையில் சகலதும் தோல்வியில் முடிந்ததை அடுத்து நேற்று மாலை வீட்டுத்திட்ட கழிவுக்குழி பிரச்சினை தொடர்பான கூட்டம் அம்பாறை அரசாங்க அதிபர் எம்.ஏ.டக்ளஸ் தலைமையில் கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட அம்பாறை அரசாங்க அதிபர் எம்.ஏ.டக்ளஸ், கல்முனை ஸ்ரீ சுபத்திரா விகாராதிபதி ரன்முதுகல தேரர், கல்முனை மாநகர சபை முதல்வர் றக்கீப், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் றிபாஸ், கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ஜௌஸி அப்துல் ஜப்பார், பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சின் பக்கீர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சந்திரசேகரன்ராஜன், பீ.சந்திரன் உட்பட நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவினர் நிலைமை தொடர்பில் கலந்துரையாடியதுடன் பின்வரும் தீர்மானங்கள் சபையில் எடுக்கப்பட்டன.

தற்காலிக தீர்வாக உடனடியாக மாநகர சபை கழிவகற்றும் வாகனம் மற்றும் ஊழியர்களை கொண்டு குழியினை சுத்தப்படுத்தி பொது வடிகானுக்குள்ளும் வீதியிலும் சேர்வதை உடன் கட்டுப்படுத்தல் என்றும் நீண்ட கால் தீர்வாக எதிர்வரும் 05 மாதங்களுக்குள் இஸ்லாமாபாத் கிராமத்திற்கு கிராமத்துடனான கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட சுமார் 07 மில்லியன் நிதியினை கொண்டு 10 வீட்டிற்கு ஒரு தனிக்குழி அமையும் வகையில் தனித்தனி குழிகளை அமைத்தல் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும்,உரிய விடயம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதை கண்காணிப்பு மேற்கொள்வதற்காக கூட்டத்தில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்கள் அனைவரையும் பிரதிநிதிப்படுத்தி குழு ஒன்றை அமைக்க ஆலோசிக்கப்பட்டதுடன் இதனை ஒருங்கிணைப்பு செய்யும் பொறுப்பினை பிரதேச செயலகம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் நிறைவுக்கு வந்தது.