காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டத்தை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவரின் மனைவி, பிள்ளைகள் அடங்கிய நால்வருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த சுமார் 52 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் மரண வீடுகளில் அவசரமாக சடங்குகளை முடிக்கவேண்டும் என்றும் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அல்லது கொரோனா தொடர்பான அச்சம் இருந்தால் உடனடியாக தம்மைத் தொடர்புகொண்டு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி கேட்டுக்கொண்டார்.
