காலி முகத்திடலில் அனுமதியின்றி தங்கியுள்ளவர்கள் மீது சட்ட நடவடிக்கை.

0
170

காலி முகத்திடலிலுள்ள போராட்டக்களத்தில் அனுமதியின்றி தங்கியுள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட எஸ்.ஹெட்டியாராச்சி, போராட்டக்களத்தில் அனுமதியின்றி தங்கியுள்ளவர்களுக்கு எதிராக நகர அபிவிருத்தி அதிகார சபை, துறைமுக அதிகார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு உரித்தான இடங்களில் அனுமதியின்றி தங்கியிருத்தல், கூடாரங்கள் உள்ளிட்ட நிர்மாணங்களில் ஈடுபடல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் இதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ள காணொளிகள் ஊடாக, போராட்டக்களத்தில் தங்கியுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, போராட்டம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் கையடக்க தொலைபேசி உரையாடல்கள் மற்றும் வங்கி கணக்குகள் ஆகியன பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.