கிரானில் சட்டவிரோத மணல் அகழ்வினை தடுக்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்

0
166

அனுமதியின்றி ஓவியா விடுதி வளாகத்தில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மணல் அகழ்வினை தடுக்கக்கோரி நேற்று மாலை திருமலை வீதி கிரானில் பொது அமைப்புக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கிரான் கிறிஸ்தவ சேவை ஆச்சிரம வீதியில் இருந்து ஆரம்பமான எதிர்ப்பு பேரணியானது ஊர்வலமாக பிரதான திருமலை வீதி வழியாக வந்து ஓவியா சுற்றுலா விடுதிக்கு முன்பாக ஓன்று கூடி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள். வாழைச்சேனை பொலிசாரினால் நீதி மன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தடை செய், தடை செய் சட்டவிரோத மணல் அகழ்வை தடை செய், நீச்சல் தடாகம் என்ற போர்வையில் மணல் அகழ்வதனை தடை செய், மீன் வளர்ப்பு என்ற போர்வையில் எமது வளத்தினை சுரன்டாதே என்பன போன்ற கோஷங்களை எழுப்பி சுற்றுலா விடுதிக்கு முன்பாக நின்று தமது எதிர்பினை தெரிவித்தனர்.

இதன்போது கோரிக்கை அடங்கிய மகஜரை கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் மற்றும் வாழைச்சேனை பொலிசாரிடம் கையளித்தனர்.

குறித்த சுற்றுலா விடுதி வளாகத்தில் கடந்த 4 மாத காலமாக பாரியளவில் மணல் அகழப்பட்டு தென்பகுதிக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு புவிசரிதவியல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாகவும். அகழ்விற்கான நியதிகள் எதுவும் பின்பற்றப்படாமல் மணல் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இதனால் குறித்த இடம் ஆழமாக்கப்பட்டு பாரிய குளம் போன்று அப்பகுதி காட்சியளிக்கிறது. இந் நடவடிக்கையினால் பிரதேசத்தில் வெள்ள காலங்களில் நீர் வழிந்தோடும் இடங்களில் சமநிலை குழப்பம் ஏற்பட்டு நீர் வழிந்தோட முடியாதுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

வெளிநாடொன்றில் வசிக்கும் இரட்டை பிரஜா உரிமை உள்ளவரே பொது நலம் கருதாமல் ஊருக்குள் மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் இவர் இச் செயற்பாட்டினை நிறுத்தாமல் தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் பாரியளவில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.