கிளிநொச்சி – திருவையாறு 2 ஆம் பகுதியில் உள்ள ஓர் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், 17 பவுன் தங்க நகைகள், 2 லட்சம் ரூபா பணம் மறறும் மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்களை தாக்கியும் அவர்களை மிரட்டியும் கொள்ளையடித்து தப்பித்துள்ளனர். திருவையாறு 2 ஆம் பகுதியில் உள்ள கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் என்பவர் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டில் தனிமையில் இருந்த கணவன் மனைவி இருவரையும் தாக்கி கை, கால் என்பவற்றைக் கட்டி விட்டு பணம் நகை எங்கே உள்ளது என வினவியுள்ளார். அதன்போது மனைவி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியையும் கையில் இருந்த காப்பையும் கழட்டி கொடுத்தபோது, தாலிக்கொடி எங்கே எனக் கேட்டு மீண்டும் இருவரையும் தாக்கியுள்ளனர். இவ்வாறு கொள்ளையிட்டவர்கள் தப்பிச் சென்ற சமயம் கை தொலைபேசிகளையும் எடுத்துக்கொண்டு வீட்டு உரிமையாளரது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். இதேநேரம் வீட்டு உரிமையாளர் மீது மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.