கிளிநொச்சி – முழங்காவிலில் கவனயீர்ப்பு

0
163

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 70 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு, இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட முழங்காவில் கிராமத்தில் இடம்பெற்றது. குறித்த 100 நாள் செயல் முனைவின் 70 ஆம் நாள் போராட்டத்தில் முழங்காவில் உள்ள இளைஞர் யுவதிகள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். ‘வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும். நாங்கள் நாட்டை துண்டாடவோ தனியரசோ கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம்’ வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும். 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம். எங்கள் நிலம் எமக்கு வேண்டும். நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, மத வழிபாடு எங்கள் சுதந்திரம், எமது மத தலங்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தாதே, இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.